Saturday, September 8, 2012

கூண்டில் அடைபட்ட கிளிகளா ஈழ ஏதிலியர்கள்…. தமிழக முகாம் வாழ்க்கை பற்றிய ஓர் ஆய்வு….

செந்தூரன் 

வரலாற்றில் தமிழனுக்கு என்று ஒரு நாடு அமையும் வரை நம் வாழ்க்கையில் இந்த அகதி என்ற வார்த்தை மறையப் போவது இல்லை. இன்றைய நிலையில் பூந்தமல்லி முகாமில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் செந்தூரனின் நிலையினை எல்லோரும் அறிந்த பின்னர் அவர்களைப் பற்றிய பார்வைகளும் பேச்சுக்களும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பரவலாக சென்று கொண்டிருக்கின்றன.

கடந்த பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவினை தொடரலாம் என்ற எண்ணத்தில் தொடர்கின்றேன். தமிழகத்துக்கு தஞ்சமாக மக்கள் வந்த 29 வது வருடம் இது.  போர் முடிவுக்கு வந்து மூன்று வருடமும் முடிவுக்கு வந்து விட்டது. இந்த கால ஓட்டந்தான் இன்றய தமிழகத்தின் ஈழத்தமிழர் அகதி முகாம் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்து இருக்கின்றது.

தமிழகம் எங்கும் அமைக்கப் பட்டிருக்கும் 115 முகாம்களிலும் மக்கள் ஒரே வகையான பிரச்சனைய எதிர்கொள்வதாகவே படுகின்றது. பொதுவாக எல்லா முகாமிலும் காணப்படும் பிரச்சனைதான் என்ன என்பதை சொல்லும் ஒரு அகதியின் சாட்சியாகவும், இதற்கு காரணங்கள் என்ன என்பதை விளக்கும் ஒரு ஆவணமாகவும் இந்த பதிவு அமையட்டும்…

2006 ஈழத்தின் போர் தொடங்கிய 7 மாதத்தில் எங்கள் தாயகப் பகுதியின் கிழக்கு பகுதியான திருகோணமலை இலங்கை அரசிடம் வீழ்ந்த பின்பு நீண்ட தூர தரை மற்றும் கடல் பயணத்தின் பின்னராக வந்தடைந்த அரிச்சல்முனை கடற்கரைப் பகுதி இன்னும் ஈரம் வற்றாமலே நினைவில் நிற்கின்றது. அன்று விட்ட மூச்சுக் காற்றுக்கு மட்டும் முன்னரை விட மாறுபாடு இருந்தது அதில் உயிர் பயம் சிறிதும் இருக்கவில்லை. அதிகாரிகள் விசாரனை , முகாமில் வந்த மக்களின் சந்திப்புக்கள் என முகாம் வாழ்க்கை பழக்கப்பட்டு கொண்ட அந்த நாட்களில்தான் தாயக நிலம் செங்குருதியில் நனைந்து கொண்டிருந்தது.  உயிர் பயத்தில் வந்தவனுக்கு தாயகம் பற்றிய கவலை எதற்கு என்று எனக்குள்ளே கேள்வியினைக் கேட்டு என்மனதிடதிலே வெட்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அவை.

ஈழ தேசம் எரிந்தபோது தம் உயிரையும்
 ஆகுதி ஆக்கியவர்கள்
உயிர்கள் ஒவ்வொரு நாளும் மடிந்து வீழ்ந்த சேதிகள் வரும் போதெல்லாம் அழுது புலம்பிய அத்தனை உள்ளங்களும் இன்று மாறுபட்டுப் போனது (இலங்கையிலும் இந்நிலைதான் இப்போது) யாரும் தாயகம் பற்றி பேசவில்லை உலகம் முழுவதும் பரவிய ஈழத்தமிழர்கள் முதல், தமிழகத்தில் செந்தீயில் வீழ்ந்து போராடிய இனப் பற்றாளர்கள், ஏதோ ஒரு நாட்டில் மனித உரிமை மீறப் பட்டு இருக்கின்றதாம் என்று ஈழம் பற்றி எதுவும் தெரியாமல் குரல் கொடுத்த மனித உரிமைப் போராளிகள் வரை போராடிய போதும் தமிழக மண்ணில் தம் சொந்த மக்கள் இறந்து போனதுக்காக துக்கம் அனுஸ்டிக்கவும் அனுமதியில்லாத நிலை. இதுதான் தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழரை முதலில் தாக்கிய பேரதிர்ச்சி.

எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று போராட விடவில்லை என்றாலும் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஸ்டிக்க கறுப்புக் கொடி கூட கட்டப்படக் கூடாத நிலையில் அதிகாரிகளின் கெடுபிடிகளை அவிழ்த்து விட்டிருந்தன மத்திய மாநில அரசுகள். இங்கு எந்த போராட்டமும் அரசியல் இலாபம் இருந்தால் மட்டும் அனுமதி இல்லாமலே செய்ய முடியும் அதை தவிர எவற்றுக்கும் அனுமதியில்லை போலும்.

இன்றைய யுத்தம் முடிவுக்கு பின்னரான 3 ஆண்டுகளில் முகாம் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு காணப் படுகின்றது. முன்பு இருந்ததை விட என்று கூறுவதை விட என்றுமில்லாதவாறு அனேகமான் குற்றச் செயல்களும் அடாவடியான நடவடிக்கைகளும் எல்லா முகாமிலும் பரவலாக நடை பெற்று வருகின்றன.

ஊடகங்கள் பலவற்றில் வந்த செய்திகளில் இருந்து அந்த அந்த முகாம்களிலே அடங்கிப் போகும் செய்திகள் வரை நாளுக்கு ஒன்றாக அரங்கேறத் தொடங்கியுள்ளது. முந்தைய பதிவில் அந்த காவல்த்துறை ஆய்வாளர் கூறியதைப் போன்று. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு, குடிவெறி வன்முறை, கடல்தாண்டி வெளிநாட்டுப் பயணம், சில தவறான உறவு முறைகள் என நாளுக்கு ஒன்று புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கின்றது.இத்தோடு முகாமிலும் முகாமைச் சுற்றி இருக்கும் தமிழக தமிழர்களுடையேயும் கருத்து முரண்பாடுகள் வளரத் தொடங்கி பல முகாமில் மோதலில் முடிவினை எட்டி இருக்கின்றன. 

இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம். ஈழத்தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த வாழ்வை மறந்து விட்டார்களா அல்லது அவர்களின் மீது இப்படியான குற்றச்சாட்டுக்கள் போடப்படுகின்றனவா என்று பார்க்கின்ற போது உண்மையில் இந்த மோசமான நிலைக்கு காரணம் பலர் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையே ஆகும்.

பொதுவாகவே எம்மக்களின் ஈழத்து வாழ்க்கைமுறை என்பது இங்கிருக்கும் வாழ்க்கை முறைக்கு முற்றிலுமாக மாறுபாட்டைக் கொண்டது. சத்தம் வைத்துக் கூப்பிடும் தூரத்தில் ஓவ்வொருவரும் வீடுகளைக் கட்டி வாழ்ந்த வாழ்க்கை முறை அவர்களது. சொந்த பந்தம் என்பவர்கள் கூட சைக்கிளில் சென்று பார்க்கும் தூரத்தில்தான் பெரும்பாலும் இருப்பர். ஒற்றைக் கடைக்கும் உத்தியோகத்துக்கும் , விவசாயத்துக்கும் போவதைத் தவிர வேறு போக்கிடம் அங்கு இருந்ததில்லை என்றாலும் இயற்கையை மெச்சிய வாழ்வோடு வாழ்ந்த அந்த வாழ்க்கை நிலை இன்று அவர்களிடத்தில் இல்லை. இயந்திரத்தை மிஞ்சிய வாழ்க்கை அவர்களை மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த மாற்றங்களை அவர்களுக்குள் கொண்டுவந்த வாழ்க்கை முறை என்ன…

1.அகதி முகாம் ஒவ்வொன்றும் இன்றைய நிலையில் நகர்ப் புற சேரிகளைப் போல் தோற்றமளிப்பது..

கடலூர் முகாம் ஒன்று,
அடிப்படை வசதிகள் செய்து தருகின்றோம் என்று ஆண்ட கட்சியும்,  ஆளும் கட்சியும்  வாக்குரைத்து வாக்குரைத்து இன்றுவரும் நல்ல வீடு, நாளை வரும் நல்ல வீடு என்ற நம்பிக்கையில் பலர் இருக்கின்றனர் சிலர் நம்பிக்கை இழந்து தம் கையில் இருந்த பணத்தினை கொண்டு தமக்கு தமக்கென நிரந்தரமில்லாத நிலையான வீடுகளை அமைத்திருக்கின்றனர். 1983, 1990 களில் வந்தபோது இருந்த மக்களின் அளவில் கட்டப் பட்ட கூட்டுக் குடியிருப்புக்களில் பல இன்று உபயோகப் படுத்தும் நிலையில் இல்லை ஆனால் அதன் பின்னர் எந்த குடியிருப்புத் திட்டமும் அமைக்கப் படவில்லை இந்த நிலையில் 2006 இன் பின்னரான மக்களின் வருகையின் பின்னர் இந்த நிலை மிகவும் மோசமடைந்து இருக்கின்றது. இன்று இருக்கும் குடியிருப்புக்கள் போதாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியில் குடிசைகள் கட்டியும் அரை சுவர் வைத்தும், வீட்டிலும் குடியமர்த்தப் பட்டிருக்கின்றனர்.

2. மோசமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி.
ஒரு நபருக்கு தேவையான அடிப்படை வசதிகளில் 2 பெரிய பிரச்சினை குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இது தமிழகத்தின் பல முகாமின் மோசமான நிலையில் காணப் படுகின்றன. ஒரு குடும்பத்துக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையில்லாமல். 50 குடும்பம் அதற்கு மேற்பட்ட குடும்பத்துக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையில் காணப் படுகின்றன பல முகாம்களில். குடிநீர் இல்லாததிற்காக லாறிக்கு காத்திருக்கலாம் ஆனால் கழிவறைப் பயன்பாட்டுக்கும் லாறிகளைக் காத்துக் கிடக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
  
3.மூச்சுத் திணற வைக்கும் குடிசன அடர்த்தியும் சாக்கடை நிலைகளும்..
 
 முகாமின் சூழல் 1990 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் குட்டி கிராமங்கள் போல்தான் தோற்றமளித்தது அதன் பின்னர் அங்கிருந்த மக்களின் பிள்ளைகள் வாழும் நிலைக்கு வந்தும் 2006 இல் இருந்து  புதிதாய் மக்கள் வந்து அவர்களுக்கு என்று தனி வீடுகள் அமைக்காமல் அந்த எல்லைக்குள்ளேயே புதிய வீடுகள் காளான்களைப் போல் முளைத்திருப்பதும், வீட்டிலிருந்து வெளியேறும் சமையல் தண்ணிரில் இருந்து குளிக்கும் தண்ணிர்,மழைகாலமானால் தேங்கி நிற்கும் தண்ணீர் வரை வெளியேற்றப் படாமலும் எல்லா இடங்களையும் ஒரு சேரியின் தோற்றத்தை பிரதிபலிக்கச் செய்து கொண்டிருக்கின்றது.

4. படித்துவிட்டும் வேலை இல்லாத வாழ்க்கையில் நாள் கூலிக்காக நாள் தோறும் அலையும் இளைஞர்கள்.
ஒவ்வொரு முகாமிலும் படித்துவிட்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டும் தாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை என்றாலும் பறவாயில்லை அதற்கு குறைவான வேலை செய்வதற்கு கூட போகமுடியாத சூழ் நிலையில் தினமும் கூலிக்கு வர்ணம் பூசவும், கேபிள் லைன் வேலைக்கும், மூட்டை தூக்கவும் செல்லும் என ஒவ்வொரு முகாமிலும் அந்த ஊரின் முக்கியமான ஏதாவது ஒரு கூலித் தொழிலினை தேடி ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம்.

இப்படியாக இருக்கும் இந்த முகாம் உண்மையில் பலரின் பார்வையில் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை என்ற நோக்கதோடே மக்கள் தமது காலத்தை கடத்தி வந்தனர், இந்த வாழ்க்கை முறைதான் இந்த மக்களை மோசமான செயற்படுகளுடன் கூடிய வாழ்க்கைக்கு இட்டுச் சென்று இருக்கின்றது.

இங்கு மக்களின் தவறான குற்றச் செயல்களைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிகளும் சரி அவர்களுக்காக பணி புரிகின்றோம் என்று கூறும் நிறுவனங்களும் சரி ஒரு விடையத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியிருக்கும் போது அந்த நெரிசலில் பல அசம்பாவிதங்கள் இடம் பெறுவது போன்றுதான் இங்கும் நடை பெற்று வருகின்றது ஒரு குடியிருப்பு தொகுதிக்கும் அடுத்த குடியிருப்பு தொகுதிக்கும் இடையில் ஒருவர் நடந்து செல்ல முடியாத வகையில் கட்டப் பட்டிருக்கும் வீடுகள், அவர்களது வீட்டுச் சாக்கடை தண்ணீரும் இவர்களது வீட்டுச் சாக்கடைத் தண்ணீரும் ஒன்றாக நடைபாதையில் கூடியிருக்கும் நிலை, வீட்டில் உள்ள பெண்கள் மறைவாக நின்று குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ இடம் இல்லாத குடியிருப்புக்கள். அவசரமாக சிறுநீர் கழிப்பதற்கு என்றால் கூட 100 மீட்டர் நடந்து செல்லும் நிலை என மக்கள் அன்றாட நடவடிக்கைகளை மோசமான முறையில் பாதித்திருக்கின்றது.


ஒரு இரவினில் அவசரத்திற்கு வெளியில் செல்வது என்றால் வெளிச்சம் இல்லாத 50, 60 குடியிருப்புக்களைத் தாண்டி, செல்லும் பெண்களின் நிலை. ஒரே வீட்டுக்குள் கூட்டுக் குடித்தனமாய் 2 -3 குடும்பங்கள்,வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் என எல்லா வகையிலும் அவர்களது அவல நிலைகள் மோசமானதாக இருக்கின்றது.

5.குடிப் பழக்கம்:
இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கை ஒருகணம் நினைவுக்கு வந்து போகின்றது. அங்கு குடித்திருப்பவர்களைக் காண்பது அரிது அதிலும் அவர்கள் வெளியிலே திரிவதைக் காணமுடியாது. அப்படிக் குடிப்பவர்கள் குறந்தது 35- இல் இருந்து அதற்கு மேலான வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு அப்படியே நிலை வேறு 10 ம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பவன் குடித்துக் கொண்டிருக்கின்றான். சாலையின் ஓரத்தில் நண்பர்களோடு புகை பிடித்துக் கொண்டிருக்கின்றான், ஆனால் இதில் நான் கண்டவற்றில் இங்கு குழந்தையாக வந்தவர்களும் இங்கு பிறந்தவர்களும் அதிகமாக ஈடுபடுவது மிகவும் வேதனையத் தருகின்றது.ஒரு முகாம் பார்வையிடும் அதிகாரி சொல்கிறார் முகாமில் பணக் கொடுப்பனவு வழங்கப்படும் நாளில் அருகில் உள்ள டாஸ்மார்க் கடையில் ரூ.125000 மேலதிகமாக விற்பனையாகிறதாம். இது எவலவு பெரிய மோசமான குடிப்பழக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.. அவனவன் சம்பாத்தியம் செய்து உழைப்பதில் குடித்தால் அதில் அளவு கணக்கு இருக்கும் இது மாதந்தோறும் இலவசமாக எதற்கு செலவு செய்யக் கொடுக்கப் படுகின்றது என்றில்லாமல் கொடுக்கப் படும் பணமாக இருப்பதால் பல வீடுகளிலும் முகாமிலும் இப்படியான செலவினங்களுக்கே செல்கின்றது… சனி ஞாயிறு ஆனால் முகாமின் பல இடங்களில் குடித்துவிட்டு தகாத வார்த்தைகள் பேசி சண்டை பிடித்துக் கொள்ளும் பலரால் இங்கு பெண் பிள்ளைகளை வைத்திருக்கவே அஞ்சுகின்றனர் பெற்றோர்கள்….

6.அரச அதிகாரிகளின் கட்டுப்பாடுகள்:
 முகாம் மக்கள் ஓர் திறந்த வெள்க் கைதிகள் என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்தும் சம்பவம் இவை. முகாமில் உள்ள அகதி மக்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க அனுமதி இல்லை. மாலை 6.00 மணிக்குள் முகாமுக்கு திரும்பி விடவேண்டும் என்று கூறுகின்றது இங்குள்ள அரச அதிகாரிகளின் சட்டங்கள். ஆனால் இவை சில முகாம்களில் தளர்த்தி உள்ளனர் அந்தந்த அதிகாரிகளின் மனதில் உள்ள ஈரத்தன்மையினைப் பொறுத்து. இந்த சட்டம் முகாமிலிருந்து தினந்தோறும் நாள் கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு பொருந்தும் ஆனால் ஒவ்வொரு முகாமிலும் பட்டப் படிப்பினை முடித்தும், தொழிற்படிப்பினை முடித்தும் பல்வேறு இளைஞர் யுவதிகள் காணப் படுகின்றனர் இவர்கள் எல்லாம் வேலை தேடி ஊர் ஊராய் அலைந்து சில இளகிய மனம் படைத்தவர்களின் தயவினால் வேலைகளில் சேர்கின்றனர் காரணம் பல நிறுவனங்கள் இலங்கை தமிழர்களை பணியில் அமர்த்துவது சட்டக் கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்று தவிர்த்து விடுகின்றன. இதனால் எங்காவது குறைந்த சம்பலத்தில் கிடைக்கும் ஒரு அலுவலக வேலையிஅனியாவது தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியுடன் வேலகளில் சேர்கின்றனர் முகாம் இளைஞர் யுவதிகள், ஆனால் அவற்றைக் கூட முளுமையாக செய்ய முடியாத நிலைதான் இன்று முகாம்களில் நிலவுகின்றது. இந்தியாவின் உயர்பதவியில் இருக்கும் யாராவது தமிழ்நாட்டுக்கு வந்தாலோ(ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், எதிக்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்) அல்லது தமிழ்நாட்டின் முக்கிய பிரமுகர்கள் அந்தந்த முகம் அமைந்துள்ள மாவட்டத்துக்கு வந்தாலோ முகாமினை விட்டு வெளியில் செல்ல அனுமதி கிடையாது. இது அவர்கள் எத்தனை நாட்கள் தங்கியிருக்கின்றனரோ அத்தனை நாட்கள் அமுலில் இருக்கும். இவை பெரும்பாலும் கிழமை நாட்களில்தான் நடைபெறும் அந்த நாட்களில் ஒவ்வொரு முகாமிலும் கியூ பிரிவு ஆய்வாளர்கள் முகாம் சோதனை என்ற பேரில் எல்லோரையும் ஓர் இடத்திற்கு வரவழைத்து குடும்பம் குடும்பமாக அடையாளப்படுத்துவார்கள். இந்த நாட்களில் பணிபுரியும் நிறுவனங்களில் வேலை என்பது சாத்தியமாகாது இத்தகைய காரணத்தினாலே பலர் வேலை இல்லாமல் ஆண்கள் படித்துவிட்டு தினக் கூலிக்கும் பெண்கள் வீட்டிலும் இருக்கின்றனர். ஒரு குற்றப் பரம்பரையினரை  அடையாலப் படுத்துவது போல், நகரத்தினை போலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரவுடிகளை பிடித்து வைப்பது போல் நடத்தும் இந்த முறை எல்லா ஈழத்தமிழர் மனங்களையும் காயப்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த சட்டங்கள் நடமுறையில் உள்ளனவா அல்லது அந்தந்த முகாமின் அதிகாரிகள் தங்கள் பணிகளுக்காக சட்டங்களைப் போட்டுக் கொள்கின்றனரா. உண்மை நிலை யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் மறுவாழ்வுத்துறையில் இருந்து வருபவர்கள் நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து பணி செய்வதற்கான சான்றினை சமர்ப்பித்தால் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு வர தேவையில்லை என்கின்றனர். ஆனால் அவ்வாறு கொடுப்பதை  அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலை படித்த பல இளைஞர்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றது.

கூற இன்னமும் மீதம் இருக்கின்றது தொடர்வேன்.....
தமிழகத்தை விட்டு சட்ட விரோதமாக வெளியேறும் ஈழ அகதிகள் அடுத்து   தொடரும்...

Friday, August 24, 2012

கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு....

ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்,  1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள்.

தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள்
ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதில் கொண்டிருந்த பலர் இன்றைய போர் முடிவுக்கு பின்னரும் தாயகம் திரும்ப வழி இன்றி வாழ்ந்து வருகின்றனர். இது போருக்கு பின்னரான அமைதிதானா என்கின்ற அச்சம் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கின்றது அத்துடன் ஆயுதங்கள்,கெடுபிடிகள் இல்லாமல் வாழ்ந்து விட்ட இந்த வாழ்க்கை அவர்களை திருபவும் அந்த சிக்கலான வாழ்க்கை முறைக்கு செல்ல தடுக்கின்றது.

இன்றய நிலையில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கும் பெரும் நெருக்கடி அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் செயற்பாடுகள்தான் ஒவ்வொரு முகாம்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் ஈழத்தமிழர்களைத் தடுக்க தமிழக காவல்துறையும், கியூப் பிரிவு ஆய்வாளர்களும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர் இந்த நடவடிக்கைகளின் போது சிக்கிக் கொள்ளும் அகதிகளும் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 100க்கு மேற்பட்ட இலங்கைத்தமிழரை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர் கியூ பிரிவினரும், தமிழக காவல்த் துறையும்..

இன்றைய சூழ் நிலையில் ஈழத்தமிழர் முகாம்கள் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் அவ்வூரில் உள்ள தமிழக தமிழர்களை விட முகாம் மக்களால்தான் வருகின்றது என்கின்ற மனப்பாங்கு வந்துவிட்டது. அதில் பொய் இருப்பதாக கூற முடியாது சமிபத்தில் ஒரு பொது விடையமாக காவல்நிலையம் சென்றிருந்த போது அந்த காவல் நிலைய ஆய்வாளர் மிகவும் கடிந்து கொண்டார் வந்த விசயத்தை கூட அவர் விசாரணை செய்யவில்லை காரணம் முகாமில் இருந்து வந்திருக்கின்றார்கள் என்றவுடன் வந்த ஆத்திரம் அது. பின்னர் நாங்கள் அங்கு வந்த நோக்கத்தினை கூறிய போது சமாதானம் ஆனார். பின்னர் சம்பிரதாயமான அறிமுகத்தின் போது நான் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளராக மலைவாழ் மக்களுக்கான பணியினை மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டேன். அவருக்கு என்னைக் கடிந்து கொண்டதன் வருத்தத்தை மீண்டும் கூறினார்.

பேச்சு தொடர்ந்த போது அவரிடம் நேரடியாகவே கேட்டேன் . சார் முகாம் மக்கள் மீதான உங்கள் ஆத்திரத்துக்கு என்ன காரணம் என கேட்ட போது அடுக்கடுக்காக சம்பவங்களை கொட்டித் தீர்த்தார். சார் இவங்க பிரச்சனையால என் தலை உருளுது சார்... ஒரு நாளைக்கு இங்கு வரும் 10 பிரச்சனையில் குறைந்தது 6-7 வது முகாமில் இருந்துதான் வருகின்றது. பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை, எனது பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டான்,கொலை, கொள்ளை,தவறான உறவுகள், வெளிநாட்டுக்கு களவாக போனவர்களைப் பிடித்து வருவது,  வேலைக்கு சென்ற இடத்தில் திருடிவிட்டான், குடித்து விட்டு கலாட்டா செய்வது என ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இதில் வெளியில் இருந்து வரும் விசாரணைகளிலும் பல முகாம் மக்கள் சம்மந்தப் பட்டதாகவே இருக்கின்றது என தனது விசனத்தை கூறி முடித்தார். அவர் கூறிய ஒவ்வொன்றும் உண்மையாக இருந்தன ஆனால் இவற்றை செய்கின்றார்கள் என்பதால் இங்கிருக்கும் முகாம் மக்கள் மீது மற்றவர்களுக்கு தவறான கண்ணோட்டம் பதிய ஆரம்பித்து இருக்கின்றது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்காக வெளியில் செல்லும் முகாம் மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்து வருகின்றது.

முன்னர் எல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க இப்பதான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கு என்று கூறும் கூற்றிலும் பொய் இருப்பதாக இல்லை இன்று எல்லா விதத்திலும் தமிழகத்தில் இருக்கும் அகதிமுகாம்கள் காவல்த்துறைக்கும் கியூப் பிரிவுக்கும் பெரும் தலையிடியாகவே இருந்து வருகின்றது.  உண்மையில் தாமாக திரும்பி தாயகம் செல்லாத வரைக்கும் தமிழக அரசுக்கும் முகாம் மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடியாத அரசியல் சூழ்நிலை. தமிழக தமிழர்களைப் போன்று நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் என பல கோணத்தில் பிரச்சனைகளைக் கையாள முடியாத நிலைகளில் இருக்கின்றன.

 இன்றைய தமிழகத்தின் செய்தி நிலவரங்களில் ஈழத் தமிழர்களின் அவுஸ்ரேலிய பயணம் பற்றிய செய்திகள் இடம்பெறாமல் இருப்பது இல்லை. சில அதிகாரிகள் நேரடியாகவே ஆதங்கப் பட்டுக் கொள்கின்றனர். உங்களுக்கு என்னையா குறை வச்சம் மாதத்துக்கு மாதம் அகதிக் கொடுப்பனவு, குடும்ப தலைவருக்கு 1000, மற்றவர்களுக்கு-750, முதியோருக்கான 1000 ரூபாய், ரேசன் பொருட்கள், அரச இலவச கொடுப்பனவுகள் என எல்லாம் வழங்கப் பட்ட பின்னரும் உங்கள் பிரச்சனைதான் என்ன என்பதை கேட்டு நிற்கின்றனர். உண்மையில் அவர்கள் கேட்பதிலும் தவறில்லை இவை அனைத்துமே இங்கு வாழும் எல்லா முகாம் மக்களுக்கும் கிடைக்கதான் செய்கின்றது.... அப்படியானால் ஏன் இந்த பிரச்சனைகள் ஈழத்தமிழர்கள் மோசமான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விட்டனரா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.....

கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் எல்லோருக்கும் பிடித்த ஈழத் தமிழர்கள் இன்று தமிழகத்தில் தவறான பார்வைக்குள் பார்க்க படுவதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது ஆனால் அது மக்களின் செயற்பாடுகளைப் பற்றி அல்லாமல் அவர்கள் வாழ்விடங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதே எனது பதில்.

ஈழம் இந்து சமுத்திரத்தின் முத்தாய் இருந்த தமிழனின் பண்பாட்டை உலகுக்கு சொன்ன ஒரு தனிச் சமுகம். இன்றும் உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழருக்கு தமிழையும்,தமிழரின் கலாச்சாரத்தயும் பரப்பிய பெருமை இருக்கின்றது. ஆனால் இங்குள்ள நிலை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்க காரணம் என்ன என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

1983 ம் ஆண்டு தமிழகத்துக்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் வந்தபோது அவர்களை கையில் தாங்கிக் கொண்டது தமிழக அரசும் மத்திய அரசும், காரணம் அப்போதிருந்த ஆட்சி நிலைகள் ஈழத் தமிழரின் வாழ்க்கையை பேணிப் பாதுகாக்கும் ஆட்சியாக இருந்ததுதான், தமிழ் நாட்டில் எங்கும் செல்லும் வசதி, பேரூந்து, புகையிரதங்களில் இலவசமாக பயணம் செய்யக் கூடிய வசதி என எல்லாவிதமான சலுகைகளையும் பெற்றதோடு தம்மை தங்கள் வீட்டு உறவைப் போல எல்லா மக்களும் தாங்கிக் கொண்டதாக கூறுகின்றனர் 83 ம் ஆண்டுகளில் வந்த முகாம் தமிழர்கள், அதன் பின்னர் 1990 ம் ஆண்டளவில் நடைபெற்ற மிகப் பெரிய புலம்பெயர்வு இவர்களுக்கு மத்திய அரசின் செல்வாக்கு இல்லாத போதும் தமிழக அரசு இவர்களிம் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் முகாம்கள் அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குட்டிக் கிராமங்கள் போல் முளைத்தன இந்த ஈழத் தமிழர் அகதி முகாம்கள் தற்போதய நிலவரப்படி 117 முகாம்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப் படுகின்றது.
தமிழ் நாட்டில் உள்ள முகாம்கள்

2006 இல் இருந்து போரின் உச்சக்கட்டத்தை அடைந்த 2009 வரை தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்த போது மத்திய அரசுக்கும் சரி, மாநில அரசுக்கும் சரி அது ஒரு தலையிடியாகவே பட்டது. இது மத்திய அரசின் ஒத்துளைக்காத செயற்பாடுகளால் வந்த தன்மையாக இருக்கலாம் அல்லது மக்கள் பட்டு வந்த துயரினைப் பார்த்து தமிழகத்தின் உறவுகள் கொண்ட கொந்தளிப்பாலும் இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் இருந்த தமிழக அரசின் செயற்பாடுகள் வந்த ஈழத்தமிழர்களை நல்லபடியாக கவணித்தாவது இலங்கையில் நடந்துமுடிந்த போருக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாகவே இருந்தது. அனைத்து இலவச திட்டங்களையும் ஈழத்தமிழர் பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது, அதுவரை கொடுக்கப்பட்டு வந்த அகதிகள் கொடுப்பனவை அதிகரித்தது, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசமாக் கலை அறிவியல் கல்வி பயிலக் கூடிய வாய்ப்பு என எல்லாமே கொண்டு வந்து கொடுத்தார்கள். இது இங்கு வந்த அகதிகளில் பலருக்கு சொந்த நாட்டை மறக்கச் செய்த செயற்பாடுகள்,  வந்த இடம் சொர்க்கம் என்று தோன்ற செய்த செயற்பாடுகள். 

தமிழ் நாடு நகர் புற சேரி
தூத்துக்குடியில் ஒரு கிராமம்
ஆனால் உண்மை இதைவிட மோசமாக இருந்தது தமிழகத்தில் வாழும் கிராமங்கள் பலவற்றிற்கு பணியின் நிமிர்த்தமாக சென்ற போது அங்குள்ள மக்களின் வறுமையும், அவர்கள் படுகின்ற துயரங்களும் ஒருகணம் யோசிக்க வைத்தது. சொந்த மண்ணில் அன்றாடம் சோற்றுக்கு இல்லாமல் அலையும் இந்த மக்களைக் கண்டு கொள்ளாமல் எம்மை ஏன் இந்த தாங்கு தாங்குகின்றது இந்த அரசு .. என எண்ணத் தோன்றியது. சேரிகள், கிராம குடிசைகள் இலவசங்களுக்கு சண்டை போட்டு மிதிபட்டு இறந்து போன மக்கள் என தமிழகத்தில் இன்றளவும் சரி செய்யப் படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் தேவைக்கு அதிகமாகவே இலங்கை தமிழருக்கு செய்து வருகின்றார்கள் என்றே தோன்றியது. இந்த எண்ண ஓட்டங்களுடனே கடந்த 5 வருடங்கள் ஓடி விட்டன . 

இலங்கையில் போரும் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளைத் தொட்ட நிலையில் வந்த விருந்தாளி திரும்பி போகாத நிலையாகி விட்டது இன்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழரின் நிலை. போர் நடக்கும் வரை ஒன்று பட்டிருந்த இந்த சமுகம் இன்று இயக்கங்களாக பிரிந்திருப்பதும், கலாச்சாரத்தை மறந்திருப்பதும் தமிழகத்தின் அரசியலில் குழப்பங்களை ஏற்பட காரணமாய் இருப்பதாக நினைக்கின்றது தமிழக அரசும், மத்திய அரசும் அத்துடன் மத்திய மாநில பட்ஜெட்டில் அகதிகளுக்கான செலவின ஒதுக்கீடும் ஒரு பெரிய பிரச்சனையாக அமைகின்றது ஐ. நா வின் அகதிகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடாத காரணத்தினால் அகதிகளுக்கு ஏற்படும் எல்லா செலவினங்களையும் தாங்கிக் கொள்ளும் தலையிடி மத்திய அரசுக்கு அத்தோடு தமது தலைவர் அமரர்.ராஜிவ் காந்தியை கொன்ற சமுகம் என்ற எண்ணத்தோடே இன்றுவரையும் தனது பார்வையை செலுத்துகின்றது ஆளும் மத்திய அரசு. இவைகள் பொதுவாக இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் இன்றைய பிரச்சனை என்ன இங்கிருக்கும் ஈழத் தமிழர்களால் இங்கு வசிக்கவும் முடியாமல் தாயகத்துக்கும் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலைக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...  

இது பற்றிய அடுத்த பதிவு தொடரும்.......

Tuesday, January 31, 2012

தொப்பையை குறைக்கும் கொள்ளு...

எப்பவுமே கணிணி முன்னாடி உட்கார்ந்திருக்கும் என்னை போன்றோருக்கு அறிவு வளருதோ இல்லையோ தொப்பை வளர ஆரம்பிச்சிடுது... இத போக்க என்னதான் செய்யிறதுன்னு யோசனையில இணையத்தை ஆராய்ந்த போது கிடைத்ததுதான் இந்த கொள்ளு சமாச்சாரம்... பார்த்ததில் இருந்து என்னை போன்று யாரும் இருந்தா கொஞ்சம் முயற்சி செய்து யாம் பெற்ற பயனை பெற இந்த பதிவு... தகவல் தொகுப்புக்கு நன்றி --ஹேமா..

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்:
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.


கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2

தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.


கொள்ளு ரசம்

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்

கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சிறிய வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள.

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)

Thursday, January 26, 2012

கலாமின் இலங்கை பயணம்..


மிகத்திறமையான கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம்

நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார்.
அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்று இந்திய டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அப்துல் கலாம், தான் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இந்துக் கல்லூரியில் சந்தித்து உரையாடிய மாணவர்களின் திறமை தொடர்பாகவும் புகழாரம் சூட்டினார்.

நேற்று முன்தினம் காலை இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர். அதில் சிறு மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமையையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என வினவினான்.

அந்த மாணவனது இந்தத் திடீர் வினா சபையார் அனைவரையும் கவர்ந்ததுடன் பலரது கரகோசத்தையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் இலட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

இதேவேளை மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாம்,

உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் என ஆங்கிலத்தில் அவர் கூறியதை அப்படியே குறித்த மாணவி திருப்பிக் கூறியதை டாக்டர் கலாம் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்.

கலாமின் இந்த வார்த்தைகள் ஊக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தாலும் எங்கள் மண்மீது நடைபெறும் எதையும் கேட்க்க முடியாதநிலையில் திரும்பியது மனதுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது....

Thursday, January 12, 2012

தமிழக அகதிகளை மீண்டும் அழைக்கும் அரசின் செயற்பாடு...

இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இலவசமாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன் வந்துள்ளது.

இலங்கையின் சுமார் 90,000 தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.

இலங்கையில் தற்போதநிலவுவதால் யுத்தம் நிறைவடைந்து சமாதானச் சூழல் மீண்டும் இவர்கள் நாடு திரும்புவதற்கு முன்வந்துள்ளனர்.

எனினும், இவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான கடவுச்சீட்டை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவகின்றனர்.

சென்னையிலுள்ள இலங்கைக்கான துணைத் தூதரகத்தில் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இந்திய நாணயப்படி 4,400 ரூபாவைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயப்படி சுமார் 10,000 ரூபாவாகும்.

குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் பிரகாரம் பயணக் கட்டணம் கட்டாயமாக செலுத்த வேண்டும். யுத்தச் சூழ்நிலையில் தமது சொந்த இடங்களை விட்டு தமிழ் நாட்டுக்குச் தப்பிச் சென்ற இந்த மக்கள் அங்கேயும், அகதி முகாம்களிலே வாழ்ந்து வந்தனர்.

எனவே இந்த மக்களின் புதிய வாழ்க்கைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய இந்த இலவச கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கும் ஆலோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து இந்த மக்களுக்கான பிரயாணப் பத்திரம் மற்றும் பயணச்சீட்டு என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு யூ. என். எச். சி. ஆர். உதவிகளை வழங்கிவருகிறது.

இதேவேளை, 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பணமும், நிவாரணங்களும் வழங்கப்படுவதுடன், இவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கான தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட உதவிகள் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகிறன்றன.

Comments are closed.