Monday, September 30, 2013

கடல் கொள்ளையர்களிடம் சிக்கியிருக்கும் ஈழ தமிழர்கள்..


கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதமளவில் தமிழகத்தில் இருந்து சுமார் 55 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு கப்பல் பற்றிய தகவல் கடந்த மாதம்வரைக்கும் அவர்களின் உறவினர்களிக்கு கூட தெரியாததாக இருந்து வந்தது..... இவர்கள் ஆழ்கடலில் மூழ்குண்டு போயிருக்க கூடும் என்று கூறிவந்த வேளையில், அந்த படகில் சென்றதாக கருதப்படும் ஒரு நபரிடம் இருந்து சமீபத்தில் அவரது தாய்க்கு அழைப்பு ஒன்று வந்திருக்கின்றது...

யாருடைய அழைப்பு என்று தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் அவர் தனது கைபேசியை பிறரிடம் கொடுத்து அதில் உள்ள தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து வைத்திருந்தார்.. அந்த இலக்கத்தை வைத்து அதன் நாட்டினைப் பற்றி அறிய முற்பட்ட போது அது சோமாலியா நாட்டின் முக இலக்கமாக காணப்பட்டது... அதன் பின்னர் அதே போன்றதொரு பிறிதொரு இலக்கத்தில் இருந்தும் தொடர்பு கொண்டு தாங்கள் அடைக்கப் பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்..

இந்த இரு தகவல்களின் அடைப்படையில் அந்த படகில் சென்ற ஈழ தமிழர்கள் சோமாலியாவின் கடற்கொள்ளையர்களால் படகில் ஏற்பட்ட ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டோ அல்லது அவர்களால் கடத்தப்பட்டோ அவர்கள் தற்போது சோமாலியாவின் ஏதோ ஓர் பகுதியில் தடுத்து வைக்கப் பட்டிருக்கலாம், அல்லது சிறை வைக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. உயிரோடு இல்லையோ என்ற நிலையில் ஏங்கியிருந்த அவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் ஏங்கோ ஓர் இடத்தில் இருப்பது சற்று ஆறுதலைத் தந்தாலும், அவர்களை அங்கிருந்து எப்படி மீட்பது என்பது குறித்தோ, மேலதிகமாக அவர்களிடம் இருந்து தகவல் வராததனால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்த படகு சரியாக கடந்த 2012 ம் வருடத்தின் செப்டம்பர் மாதம் இறுதிப் பகுதியில் தமிழகத்தின் ஏதோ ஓர் பகுதியில் இருந்து புறப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதில் பயணம் செய்தவர்களின் உறவுகள் அது பற்றியும், அதில் சென்று காணமல் போனவர்கள் பற்றியும் வெளியே கூறாமல் இருக்கும் காரணத்தினால் அங்கு பிடிபட்டு இருப்பவர்களை மீட்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

நிற்க.... அங்கிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை மீட்க பணம் தயார் செய்யும்படியும் கூறியுள்ளனர், இந்த நிலையில் யாரைத் தொடர்பு கொண்டு யார்மூலம் இதனைச் செய்வது, எப்படி அவர்களை அணுகுவது என்பது கூட தெரியாத நிலையில் உள்ளது, காரணம் பின்பு அந்த இலக்கங்களில் இருந்து எந்த அழைப்பும் அவர்களுக்கு வரவில்லை....



அகதியாக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்ற பல்வேறான கப்பல்கள் இதே நிலையை அடைந்து காணமல் போய் பல வருடங்கள் கழித்தும் இதுபற்றி தங்களது உறவுகளைத் தேடாமல் நூற்றுக்கணக்கான ஈழ தமிழ் குடும்பங்கள் தமிழகத்தின் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர், அது அவர்கள் யாரிடம் இதைக் கேட்பது என்று தெரியாததும், தமிழக மற்றும் மத்திய அரச அதிகாரிகளிடம் கூறினால், அவர்கள் தாங்கள் எச்சரிப்பு விடுத்ததை மீறிப் போனதனால் வந்த விளைவு என்று தட்டிக் கழித்து விடுவார்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இன்றைய சூழலில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், புகழிடம் புகமுன்னர் காணமல் போயிருக்கின்றனர், அவர்கள் எங்கிருக்கின்றார்கள், யார் யார் என்ற விபரங்களையாவது முன்வந்து திரட்ட வேண்டும், காணமல் போனவர்களின் குடும்பங்கள் சிதறுண்டு போய் இருக்கின்ற நிலைகள் மாறவேண்டும்..

 யார் இதைச் செய்வது தங்கள் உறவுகளைத் தொலைத்தவர்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும்...




Monday, March 18, 2013

தாயக விடுதலை வேண்டி தமிழக முகாம் மக்களின் மெளன ஊர்வலம்...

மெளன ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள்
18.3.2013 இன்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் தமது தாயக விடுதலைக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் , இன விடுதலைக்காக தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடத்தும் மாணவர்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தும் மெளன ஊர்வலம் அகதி முகாமில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையிலான சாலைகளில் நடத்தப்பட்டது, இதில் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் இருந்து 1250 கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு மெளன ஊர்வலம் வந்தனர், ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியினை மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் வழங்கியிருந்தனர், முகாம் மக்கள் தமது கோரிக்கையை முன்னிறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.....ஊர்வலம் குறித்து கருத்து தெரிவித்த முகாம் மக்கள் குழு , எமது தமிழின விடுதலைக்காக இன்று தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள் நன்ரி என்னும் வார்த்தைகள் மட்டும் கூறி முடித்து விட முடியாதவை, அவர்களது குரலுக்கு வலுச்சேர்க்கவும் எங்களை மீண்டும் எங்கள் தாயகத்தின் சொந்த இடங்களில் நிம்மதியான வாழ்க்கை வாழ இந்திய அரசு இலங்கையினை எதிர்த்து மனித உரிமைகள் பேரவையில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும், இறந்து போன எங்கள் உறவுகளின் உடல்களுக்கு ஞாயம் வேண்டும், காணமல் போன எங்கள் சொந்தங்களை கண்டு பிடிக்க வழி செய்ய வேண்டும்  என்பதை அவர்களிடம் எங்கள் மீது இரக்கம் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என முன்வைக்கின்றோம்...


நிகழ்வின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள்